பாடல் எண் : 24 - 9
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் நீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.
9
பொ-ரை: பூதப்படை கொண்டவரும், வேதத்தவரும், இனியகீதத்தவரும், சடையிற்கொண்ட கங்கையினரும், சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும், தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும்.
கு-ரை: படைகொள்பூதத்தர் - பூதப்படை கொண்டவர். வேதத்தர் - வேதமோதுபவர். கீதத்தர் - இசைபாடுபவர். சாந்த வெண்ணீற்றினர் - வெண்ணீற்றைச் சாந்தமாகக் கொள்பவர். உடையும் தோல் உகந்தார் - தோலையும் உடையாக ஏற்றுக்கொண்டவர். அல்கும் - சுருங்கும்.