பாடல் எண் : 30 - 5
போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.
5
பொ-ரை: உலகில் உள்ளவர்களே! தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத் தீர்த்தருள்க என்று பரவித் தொழுதெழுந்து உய்வீர்களாக.
கு-ரை: தாதொடுபோது கொண்டு என மாறுக. தாது - மகரந்தம். புனைந்து - சாத்தி. உடன் - பின்னர். தாதவிழ் சடை - மகரந்த முறைந்து மணந்து விளங்கும் சடை. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். பாதத்துள் - திருவடிகளில். வாதை - பிறவிநோய். இருவினை முதலிய பாசத்தால்வரும் துன்பங்கள். தீர்க்க என்று - தீர்த்தருள்வீராக என்று. ஏத்தி - புகழ்ந்து; தோத்திரித்து. உய்மின் - வாழுங்கள்.