பாடல் எண் : 30 - 6
நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.
6
பொ-ரை: நெஞ்சே! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும், நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும், பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல் பினரும், தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக!
கு-ரை: நல்ல நான்மறை - நன்மையைத் தருவனவாய நான்கு வேதங்கள், தில்லையான் - தில்லையில் எழுந்தருளி இருப்பவன். வல்லையாய் - விரைவுடையனாய். தொழு - வணங்கு. வாய்மையே - உண்மையாக.