பாடல் எண் : 30 - 7
நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே.
7
பொ-ரை: நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும், மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல், மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது.
கு-ரை: நெருப்பினால் குவிந்தாலொக்கும் நீள்சடை - நெருப்பைக் குவித்தது போன்று செவ்வொளி விரித்த நீள்சடை. பருப்பதம் - மலைபோன்ற. மதயானை - மதம் பொருந்திய யானை, திருமார்பின் நூல் பொருப்பு அருவி இழிபுனல் போன்றது - மார்பில் அணிந்த பூணூல் மலையினின்று இழியும் அருவி போன்றது என்க.