பாடல் எண் : 31 - 5
வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே.
5
பொ-ரை: ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் "அஞ்சேல்" என்று அருள்பவன் அப்பெருமானேயாவன்.
கு-ரை: வஞ்சமின்றி - மனத்தில் வஞ்சனையில்லாமல். வைகலும் - நாடோறும், வெஞ்சொல் இன்றி - கொடுஞ்சொற் பேசுதலின்றி. விலகுமின் - வஞ்சனை வெஞ்சொல் இவற்றை விட்டொழியுங்கள். வீடற என்பதுபாடமாயின் - கெடுதல் நீங்க எனவுங் கொள்க. வீடுற - வீட்டுநெறியை அடைய. நைஞ்சு நைஞ்சு - உருகி உருகி. நைந்து என்பது நைஞ்சு எனத் திரிந்தது; போலி. உள் - உள்ளம்.