பாடல் எண் : 32 - 10
துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
10
பொ-ரை: தோளாற்றலும் மிக்க வாளாற்றலும் உடைய இராவணனை துடிக்குமாறும், அவன் பிடித்த கைகள் நெரிவுறுமாறும், கண்ணெலாம் நீர்த்துளிகள் பொடிக்குமாறும் திருவிரலால் ஊன்றிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெருமைமிக்க சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
கு-ரை: துடித்த - தினவெடுத்த. வலி - வலிமை. பிடித்த - கயிலை மலையைப்பற்றிய. நெரித்துற்றன - நெரிந்தன. கண்ணெலாம் - இருபது கண்களும். பொடிக்க - நீர் அரும்ப. ஊன்றிய - மிதித்த. படிகொள் சேவடி - அன்பர்க்கருளவேண்டி நிலத்தின் கண்ணே பொருந்திய அவனது சிவந்த திருவடிகள்.