பாடல் எண் : 32 - 9
செதுக றாமனத் தார்புறங் கூறினும்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
9
பொ-ரை: குற்றம் நீங்காத மனத்தினர் புறம் பேசினும் கொசு நீங்காத பீளைசார்ந்த கண்களையுடைய புறச்சமய நோன்பிகள் இழித்துக் கூறினும் மன்றவாணனாகிய பூந்துருத்திப் பெருமான் சேவடிக்கீழேயே நாம் இருப்போம்.
கு-ரை: செதுகு அறா - தீங்கு அல்லது குற்றம் நீங்காத. புறங்கூறினும் - புறம் பேசினாலும். கொதுகு - கொசு; பீளை சார்ந்த கண்கள் என்க. பொதுவில் நாயகன் - பஞ்ச சபைகளின் தலைவன். அதிபன் - தலைவன்.