பாடல் எண் : 33 - 2
முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
2
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! முத்திப் பேறெய்தற்பொருட்டு ஒரு தவமும் செய்திலை; அடியார்களுக்கு விருப்பத்தோடு ஒன்றையும் அளித்தாயில்லை; பூங்கொத்துகள் நின்று மலர்கின்ற சோற்றுத்துறையர்க்கு இனியாகிலும் பத்தியோடு பணிசெய்வாயாக.
கு-ரை: முத்தியாக - வீடுபேறடையும்பொருட்டு. தவம் - அடியார்க்களித்தல் அரனை ஓம்பல் முதலிய தவங்கள். செய்திலை - செய்யாதிருந்தாய். அத்தியால் - அருத்தியால்; விருப்பத்தோடு. அதனால் என்றுமாம். அளித்திலை - கொடுக்கவில்லை. அடியார்க்களித்தல் அரன்பணியினும் சிறந்தது என்றபடி. தொத்து நின்றலர் - கொத்துக்களாய் நின்று மலரும், சோலைகளையுடைய என வருவிக்க. பத்தியாய் - அன்போடு.