பாடல் எண் : 34 - 3
ஆனிடை யைந்தும் ஆடுவ ராரிருள்
கானிடை நடம் ஆடுவர் காண்மினோ
தேனிடை மலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே.
3
பொ-ரை: பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமஞ்சனம் கொள்பவரும், நள்ளிருளில் இடுகாட்டிடை நடம் ஆடுபவரும் ஆவர்; காண்பீராக! மலரிடைத் தேன் பொழிந்து பாயும் திருநெய்த்தானனை வானிடைத் தொழுவார்கள் வலிமையோடு வாழ்பவராவர்.
கு-ரை: ஆனிடை ஐந்து - பசுவிடத்துண்டாய பஞ்சகவ்வியம். ஆர்இருள் - மிக்க இருள் செறிந்த இரவு. கான் - இடுகாடு. மலரிடைத்தேன்பாயும் என்று மாறுக. வானிடைத் தொழுவார் - உள்ளத்தின்கண் உள்ள தகராகாசத்துவைத்துத் தியானிப்போர். வலி - வினைகளை வெல்லும் வலிமை.