பாடல் எண் : 34 - 7
கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தால்தொழு வாரும்பர் வாணரே.
7
பொ-ரை: தீக்கொள்ளியினின்று எரிவீசிக் கொடிதாகிய கள்ளிக்காட்டில் ஆடும் இயல்பினர் காண்பீராக; தெளிவு அடைந்து தேறிப் பின்னும் தெளிந்து அத்திருநெய்த்தானரை உள்ளத்தால் தொழுவார் தேவர்களோடு ஒத்த பேரின்பம் பொருந்தி வாழ்பவராவர்.
கு-ரை: கொள்ளித் தீ - சுடுகாட்டுக் குறைக்கொள்ளி. வீசி - சுழற்றி. கள்ளிக்காடு - கள்ளிச்செடி முளைத்த இடுகாடு.
தெள்ளித்தேறி - ஆராய்ந்து தெளிந்து. உம்பர்வாணர் - தேவர் உலகில் வாழ்பவராவர் என்க.