பாடல் எண் : 36 - 9
நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.
9
பொ-ரை: செம்பொன்பள்ளி இறைவர் நன்மை மிக்க நாரணனும், பிரமனும் ஆகிய இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும் காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர்.
கு-ரை: நன்றி - நன்மையையுடைய. பிரமன்போலப் பொய் கூறாமையின் நன்றி நாரணன் என்றார். நீள் எரியாகிநின்ற சூழலில் நீள்முடியோடு அடி காண்புறச் சென்று காண்பறியானென்க.