பாடல் எண் : 37 - 6
விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே.
6
பொ-ரை: விடுத்த பெரியமலையை விண்ணுற நிமிர்க்கும் ஆனையார்; தொடுத்த பெரியமலை தூய்மையாக உடைய ஆனையார்; சினந்துவந்த காலனைக் காய்ந்த ஒப்பற்ற கடவூர்த்தலத்திறைவர் சினத்தலுற்ற ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
கு-ரை: விண்ணுற விடுத்த - ஆகாயத்தை அளாவச் செய்த. மால்வரை - பெரியமலை; கயிலாயம். மால்வரை தொடுத்த - பெரிய இமயமலையை வில்லாக வளைத்த. கடுத்த - கோபித்த.