பாடல் எண் : 44 - 4
பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.
4
பொ-ரை: ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன்; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன; காண்பீராக.
கு-ரை: பஞ்ச பூதவலை - ஐம்பூதங்களாகிய வலை. நினைவெய்தலும் - நினைப்பை அடைந்தவுடன், வஞ்ச ஆறுகள் - வஞ்சனையாகிய ஆறுகள். வற்றின - நீங்கின. இறைவனை நினைப்போரை மாயாகாரியங்கள் மயக்கமாட்டா என்பது கருத்து.