பாடல் எண் : 44 - 5
குராமன் னுங்குழ லாளொரு கூறனார்
அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் யீசனை
நிராம யன்தனை நாளும் நினைமினே.
5
பொ-ரை: குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும், பாம்பு நிலைபெற்ற சடையனும், திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும், நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக.
கு-ரை: குராமன்னும் - குராமலர் பொருந்திய. குழலாள் - கூந்தலை உடையவளாகிய பார்வதி. ஒரு கூறனார் - இடப்பாகத்தே உடையவர். அரா - பாம்பு. நிராமயன் - நோயற்றவன்; பசுத்துவமில்லாதவன். இராமன் வழிபட்ட தலவரலாற்றை உட்கொண்டது.