பாடல் எண் : 44 - 7
நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர்
ஆற்றி னானணி யாமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை யீசனே.
7
பொ-ரை: எம்மை ஆளுடைய இறைவன், திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும், நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும், அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன்.
கு-ரை: நீற்றினார் - திருநீறு பொருந்திய. நேரிழை - பார்வதி. குழல் - தலைமயிர். கோலம் - அழகிய. குழல் அம்மை பாகத்து முடியாகக்கொண்டு. குழல்கோலமாகக் கலந்த சடை எனலுமாம். ஆற்றினான் - கங்கை ஆற்றை உடையவன்.