பாடல் எண் : 49 - 5
பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புர மோரம்பால்
செற்ற வன்திரு வெண்கா டடை நெஞ்சே.
5
பொ-ரை: நெஞ்சே! உயிர்களாற் பற்றத்தக்கவனும், கங்கை, பாம்பு, பிறையுடன் உற்றவனும் சடையினனும், உயர்ஞானங்கள் கற்றவனும், கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
கு-ரை: பற்றவன் - எப்பொருட்கும் சார்பாயிருப்பவன். கயவர் - அசுரர். உயர் ஞானங்கள் கற்றவன் - கலைஞானங்களை இயல்பாயுணர்ந்தவன்.