பாடல் எண் : 50 - 10
தீண்டற் கரிய திருவடி யொன்றினால்
மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை
வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.
10
பொ-ரை: பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன்; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான்.
கு-ரை: தீண்டற்கரிய திருவடி - திருமால் முதலிய தேவர்களாலும், வேதங்களாலும் தீண்டுவதற்கரிய திருவடி. மீண்டற்கும் மிதித்தார் - அத்திருவடியால் ஆணவம் அழிப்பதற்கேயன்றி அவன் உய்தற்கும் மிதித்தார் என்க. கொள்வன் - பயன்கொள்வேன். என்றலும் - என்று நினைத்தவுடன். தோன்றும் - வெளிப்படுகின்றான்.