பாடல் எண் : 54 - 3
கள்ளி னாண்மல ரோரிரு நான்கு கொண்டு
உள்கு வாரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.
3
பொ-ரை: தெள்ளிய நீர்வயலிற் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய வெண்ணீறணிந்த திருமேனி உடைய பெருமான், தேன் ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக் கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார்.
கு-ரை: கள்ளின் நாண்மலர்- தேன் நிறைந்த மலர். ஓர் இருநான்கு - எட்டுமலர்கள். தெள்ளுநீர்-தெளிந்த நீர்.