பாடல் எண் : 54 - 4
பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.
4
பொ-ரை: செறிந்த குளிர்நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய புலித்தோலை ஆடையாக உடுத்த பெருமானே, எட்டுவகைப்பட்ட பூங்கொத்துக்களை இட்டு வணங்கிநிற்கும் அடியார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார்.
கு-ரை: பூங்கொத்தாயின-எட்டுவகை மலர்களின் பூங்கொத்துக்கள். மூன்றோடோரைந்து-எட்டு. இட்டு-சாத்தி. வாங்கி-வளைந்து; வணங்கி. வீங்கி -பெருகிய. உடையாடை -உடுத்தற்குரிய ஆடை.