பாடல் எண் : 55 - 1
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.
1
பொ-ரை: மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர், பிறிதொன்றற்கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர். உமையம்மையை ஒருபங்கில் உடையவர்; வளைந்த பிறை சூடியவர். ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே.
கு-ரை: வீறுதானுடைய வெற்பன்-பெருமை பொருந்திய மலையரையன். கூன் பிறை - வறைந்த பிறை. நாறு - மணம் கமழும். அம்ம -வியப்புமொழி; மிக என்னும் பொருட்டு.