பாடல் எண் : 55 - 10
கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்ததன்மையு மம்ம வழகிதே.
10
பொ-ரை: கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும்.
கு-ரை: கடுக்கை-கொன்றை. அம்-அழகிய. நடுக்கம் வந்து இற-நடுக்கமடைந்து நொறுங்க. அடுத்த-ஊன்றிய.