பாடல் எண் : 58 - 10
செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.
10
பொ-ரை: போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும், பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள் வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும்.
கு-ரை: செருத்தனை-போரை. சேண்-புகழால் நீண்ட. எருத்து - பிடரி. இற-நொறுங்க. இறை-சிறிதே. அருத்தனை-பொருள் வடிவானவனை. திருத்தன்-அழகியவன்.