பாடல் எண் : 58 - 8
ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே.
8
பொ-ரை: அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும், வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம்.
கு-ரை: ஓதினத்து எழுத்தஞ்சும்- ஓதவேண்டிய திருவைந்தெழுத்தையும். உணரா-ஓதியுணராத. வேதினைப்படுத்தானை- துன்பம் செய்தவனை. வெங்கூற்று -கொடிய கூற்றை. உதை- உதைத்த. பாதன்-திருவடிகளையுடையவன்.