பாடல் எண் : 59 - 2
ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே.
2
பொ-ரை: கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும், குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை.
கு-ரை: ஆலத்து - கல்லாலமரத்து. ஆர் - பொருந்திய. கோலத்தால் - அழகிய தமது தோற்றத்தால். வாக்கினால் சொல்லாது வீற்றிருந்த நிலையும் காட்டிய ஞானமுத்திரையுமாகிய கோலத்தால் என்க. உரை செய்தவன் - சொல்லாமற் சொன்னவன். ஆர் அருள் - அரிய திருவருள். ஏல - ஏற்புடைத்தாக.