பாடல் எண் : 59 - 4
தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே.
4
பொ-ரை: தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது, கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போது வீராக; உம் வினையாயின போகும்.
கு-ரை: தீதவை செய்து - தீமையாயினவற்றைச் செய்து. தீவினை வீழாதே - தீவினையின்கண் சாராது. போதுமின் எனக் கூட்டுக. காதல் - அன்பு. கருத்தினில் நின்ற - கருத்தோடு நின்ற. பயில் - வாழ்கின்ற. போதுமின் - வாருங்கள்.