பாடல் எண் : 59 - 9
வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.
9
பொ-ரை: அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து, வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும், மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள்.
கு-ரை: விசயன் - அருச்சுனன். வெம்காடு - இடுகாடு. நீடுஉகந்து - பெரிதும் விரும்பி. பரலோகம் - மேலான உலகம்.