பாடல் எண் : 6 - 3
விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளுமா ரூரரே.
3
பொ-ரை: வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள்தோறும் பலிதேரும் இளமையுடையவரும், துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும், தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
கு-ரை: விண்ட - தோல் தசை நரம்பு முதலியவை நீங்கிய. குழகன் - இளமையுடையவன். துண்டம் - இருமுனையும் ஒட்டி முழுமையாகாத ஒரு கலைப்பிறை. அண்டவாணர் - தேவர்கள். வாணர் - வாழ்நர் என்பதன் மரூஉ.