பாடல் எண் : 60 - 10
உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லாதோ ரின்பம் அணுகுமே.
10
பொ-ரை: செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக்கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும்.
கு-ரை: உந்திச் சென்று - தேரைச் செலுத்திக்கொண்டு சென்று எனலுமாம். சந்து - மூட்டுவாய். இற - நொறுங்க. அந்தம் - முடிவு. அணுகும் - நெருங்கும்.