பாடல் எண் : 62 - 2
யாவ ருமறி தற்கரி யான்றனை
மூவ ரின்முதல் லாகிய மூர்த்தியை
நாவி னல்லுரை யாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே.
2
பொ-ரை: எல்லோரானும் அறிதற்கு அருமை உடையவனும், மும்மூர்த்திகளுக்கும் முதலாகிய கடவுளும், நாவில் நல்ல உரையாகி அருளும் நாதனும், தேவனுமாகிய பெருமானைப் புத்தூரிலே சென்று கண்டு உய்ந்தேன்.
கு-ரை: மூவரின் முதலாகிய மூர்த்தியை-அரி அயன் அரன் என்னும் மூவரில் தலைவராயிருப்பவனை. நாவில் நல்லுரையாகிய நாதன்-நாவின்கண்ணிருந்து வரும் நல்ல உரைகளின் வடிவாயிருப்பவன்.