பாடல் எண் : 65 - 10
நார ணன்னொடு நான்முக னிந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே.
10
பொ-ரை: திருமாலும், பிரமனும், இந்திரனும், விநாயகரும், முருகனும் வணங்கும் கழலை உடைய நிறைவானவனும், திருப்பூவனூரில் பொருந்திய உலககாரணனுமாகிய பெருமானே, என்னை ஆளுடைய காளைபோல்வான்.
கு-ரை: வாரணன் - யானைமுகக் கடவுளாகிய விநாயகர். பூரணன் - எல்லாவற்றாலும் நிரம்பியவன். காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணமாயிருப்பவன். காளை - காளை போன்றவன்.