பாடல் எண் : 66 - 5
விண்ட வர்புர மூன்று மெரிகொளத்
திண்தி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.
5
பொ-ரை: பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ளமிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய, வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன்.
கு-ரை: விண்டவர் - அறத்தின் நீங்கியவர். மனம் பொருந்தாது நீங்கிய பகைவர். திண்டிறற்சிலை - திண்ணிய வலிமையோடு கூடிய இமயவில். முரலும் - ஒலிக்கும். அண்டன் - உலகங்களை உடையவன். அடிமைத்திறத்தாவன் - அடிமையாம் திறத்தை நான் அடைந்தவனாவேன். ஏ - அசை.