பாடல் எண் : 67 - 4
அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க் கமரரே.
4
பொ-ரை: நம் தேவதேவராகிய இறைவர், ஆறங்கங்களும் நால்வேதங்களும் தங்குகின்ற வேள்வியுடைய அந்தணர்கள் பயிலும்நகராகிய திருவாஞ்சியத்தில், சிவந்த கண்ணையுடைய திருமாலை இடப்பாற்கொண்டு தங்குவார்.
கு-ரை: அங்கமாறு - வேதாங்கங்கள் ஆறு. அவையாவன சிக்ஷை, வியாகரணம், நிருத்தம் முதலியன. அருமறை - உணர்தற்கரிய ருக், யசுர், சாமம், அதர்வணம். தங்கு - பொருந்திய. பயிலும் - எழுந்தருளியிருக்கும். செங்கண்மால் - சிவந்த கண்ணையுடைய திருமால். அமரர்க்கு அமரர் - தேவர்க்குத் தேவர்.