பாடல் எண் : 68 - 2
ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
வார ணத்துரி போர்த்தம ணாளனார்
நாரணன் நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞானக் கடவுளே.
2
பொ-ரை: திருமால் பொருந்தி ஏத்துகின்ற நள்ளாற்று இறைவர், வேதத்தின் பொருளாக விளங்கும் அருளை ஆள்பவர்; யானையின் தோலைப் போர்த்த மணவாளர்; எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய கலைஞானக்கடவுள் ஆவர்.
கு-ரை: ஆரணம் - வேதங்களின் தொகுதி. ஆரணப்பொருளாம் அருளாளனார் - வேதப் பொருளாய்விளங்கும் கருணையாளர். வாரணத்து உரி - யானையினது தோல். நாரணன் - திருமால். நண்ணி - சென்றடைந்து. காரணன் - எல்லாவற்றிற்கும் நிமித்த காரணன். கலைஞானக் கடவுள் - கலைஞானம் தரும் கடவுள் என்க. அல்லது அவற்றிற்குப் பொருளாயுள்ள கடவுள் எனலுமாம்.