|
பொ-ரை: கரிய கண்டம் உடையானும், அண்டத்திலுள்ளானும், கையிற் சூலம் உடையானும், கண்ணுதலானும் ஆகிய திருவாரூர்த்தலத்தின்கண் ஐயன் அடிதொழும் எல்லாரும் உய்தி பெறலாம்; துன்பம் ஒன்றும் அவர்க்கில்லை; காண்பீராக. கு-ரை: ஆரூர் இறைவன் அடிதொழுவார்க்கு அல்லல் இல்லை என்றறிவிக்கிறது. மை - விஷத்தின் கரியநிறம். அண்டத்தன் - பாரொடு விண் உலகமாய்ப் பரந்து விரிந்தவன். உலாவிய - விளங்கிய. ஐயன் - அழகியன் அல்லது தலைவன். அடி தொழுவார்க்கெலாம் அல்லல் ஒன்றில்லை. அவர்கள் உய்யலாம் என்றியைக்க. காண்மின் அஃது உண்மை என்பதைக் காணுங்கள். |