பாடல் எண் : 71 - 3
கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற வுருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.
3
பொ-ரை: கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில் வெள்ளிய இடபம் பூசிக்க அதற்கு அருள்செய்தவனும்,விசயமங்கையுள் இடமாகக்கொண்டு உறைகின்றவனும் ஆகிய உருத்திரன், கிள்ளிய விடத்துப் பிரமனுக்குத் தலை ஒன்று அற்றது.
கு-ரை: கொள்ளிடக்கரை - கொள்ளிடநதியின் கரையின் கண்ணே உள்ள. கோவந்தபுத்தூரில் கோவந்தபுத்தூர் என்னும் தலத்தில். வெள்விடைக்கு அருள்செய் - வெண்மையான இடபத்திற்கு அருள் செய்த. உருத்திரன் - துன்பத்தை ஓட்டுகின்றவன். அயனுக்குக் கிள்ளிடத் தலையற்றது - பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றினைக் கிள்ளிட அவ்வயன் ஒரு தலையற்றவனானான்.