பாடல் எண் : 72 - 1
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.
1
பொ-ரை: தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் செத்தபோது உம்மைச் செறியார்; பிரிவதே இயல்பாம்; நாள் தோறும் நீலக்குடியரனை நினையும் சித்தம் ஆகின்சிவகதி சேர்வீர்.
கு-ரை: வைத்த - சேமித்து வைத்த. மாடு - செல்வம். மக்கள் என்பதிலும் உம்மை சேர்க்க. நீர் - நீங்கள். செறியார் - உடன் வராதவராய். பிரிவதே - நீங்குதலைச் செய்வர். நித்தம் - நாள்தோறும். நினை - நினைக்கும். சித்தமாகில் - மனமுடையீரானால். சேர்திர் - சேருவீர்.