பாடல் எண் : 75 - 2
கட்டா றேகழி காவிரி பாய்வயல்
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா
முட்டா றாஅடி யேத்த முயல்பவர்க்
கிட்டா றாஇட ரோட எடுக்குமே
.
2
பொ-ரை: கட்டப்பட்ட கரைக்குள்ளடங்கிய நெறியின் வழியே கழிகின்ற காவிரி பாய்கின்ற வயல்களில் கொட்டும் நெறியெல்லாம் புனல் ஊறுகின்ற குரக்குக்காவினை முட்டாத நெறியே திருவடியேத்த
முயலும் அடியவர்களுக்குப் பொருந்தும் நெறியாய துன்பங்கள் ஓடுமாறு அருள் புரிவான் இறைவன். கு-ரை: கட்டாறே - கரையாகக் கட்டிவிடப்பட்ட வழியிலேயே. கழி - செல்லுகின்ற. கொட்டாறே - கொட்டித் தோண்டுமிடந் தோறும். முட்டாறா - குற்றம் நீங்கிய நெறியிலே. இட்டாறா - விருப்பத்தின்படியே.