பாடல் எண் : 75 - 3
கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
3
பொ-ரை: பக்கமெங்கும் கலந்து எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக் கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.
கு-ரை: கையனைத்தும் - இரு பக்கங்கள் எங்கணும். கலந்தெழு - சென்று பரவித் தோன்றுகின்ற. செய் - வயல். கொய் - மீன் இனங்களில் ஒன்று. செம்புனல் கொணரும் என்க. ஐயன் - அழகியன் அல்லது தலைவன். அல்லல் - துன்பம்.