பாடல் எண் : 8 - 4
வேத கீதர்விண் ணோர்க்கு முயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றாரன்னி யூரரே.
4
பொ-ரை: வேதங்களை இசையோடு ஓதுவோரும், விண்ணோர்க்கும் உயர்ந்தவரும், ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும், நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
கு-ரை: சோதி - ஒளி. துன்று - நெருங்கிய. அல்லது படர்ந்த. அடியார்தமக்கு ஆதி - அடியவர்களால் தம் உணர்வின் முதல் எனக் கருதப்படுவோன்; "போற்றி என் வாழ்முதல் ஆகியபொருளே' (தி.8 திருவாசகம் - திருப்பள்ளி எழுச்சி - 1) என்றாற்போல.