பாடல் எண் : 80 - 6
வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வய லன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சில ரூமரே
.
6
பொ-ரை: கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகிய பெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள்; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந்துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார்.
கு-ரை: வெள்ளம் - கங்கை. நந்தி - சிவபெருமானுக்குரிய பெயர். கள்ளம் - வஞ்சகம். காண்கிலார் - காணமாட்டார். அள்ளல் - சேறு. ஆர் - பொருந்திய. உள்ளவாறு - உள்ளபடி.