பாடல் எண் : 83 - 5
மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே
.
5
பொ-ரை: உண்மையே உருவானவனும், விடையை ஊர்தியாகக்கொண்டவனும், வெண்மழுவைக் கையிற்கொண்டவனும், நாகைக்காரோணனும், ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை.
கு-ரை: மெய்யன்-உண்மையின் வடிவாய் விளங்குகின்றவன். வெண்மழுக்கையன்-வெள்ளிய மழுவாயுதத்தைக் கையின்கண் உடையவன். மை-கரியவிடம். அனுக்கிய-வருத்திய, வென்ற. விடத்தினை மாற்றிய நீலகண்டன் என்க. "பிறையனுக்கிய செஞ்சீறடி" வானவர் ஐயன் - தேவர்கள் தலைவன்.