பாடல் எண் : 84 - 8
வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையேதொழுங் காட்டுப்பள் ளிய்யுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.
8
பொ-ரை: அறிவற்றவர்களே! வேலை, அழகால் வென்ற கண்ணை உடைய பெண்டிரை விரும்பி, நீர் ஒழுக்கம் கெட்டுத் திகையாதீர்; காட்டுப்பள்ளியில் உறையும் திருநீலகண்டனை நித்தமும் நினைந்து காலத்தே சென்று தொழுவீராக.
கு-ரை: வேலை வென்ற கண்ணார் - கூர்மையால் சென்று தைத்தலில் வேலை வெற்றிகொண்ட கண்களை உடைய பெண்கள். திகையன்மின் - உலகவாழ்விலேயே திகைத்துச் செயலற்று நிற்காதீர்கள். காலையே தொழும் - உடலில் உயிர் உள்ள காலத்திலேயே தொழுது வணங்குங்கள். நித்தல் - நாடோறும்.