பாடல் எண் : 89 - 6
ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்
ஆறு போலெம் அகத்துறை யாதியே
.
6
பொ-ரை: எம் உள்ளத்துறையும் முதல்வனாகிய பெருமான், ஆறு கால்களையுடைய வண்டு ஒலிக்கும் கொன்றையை உடையவன்; கங்கையாற்றைச் சடையிற் சூடிய அண்டங்களுக்கெல்லாம் முதல்வன்; கூரிய அறிவுடைய அறுவகைச் சமயத்தார்க்கு அச்சமயப் பொருளும் நெறியும் ஆயவன்.
கு-ரை: ஆறுகால்வண்டு - ஆறுகால்களையுடைய வண்டு. மூசிய - மொய்த்த. ஆறு - கங்கை. ஆறுகூர்மையர் - கூரிய அறிவைத் தருகின்ற ஆறு சாத்திரம். சமயப்பொருள் ஆறு - ஆறு சமயத்தவர் பொருள்போல் இருப்பவன். "அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்" (சிவஞானசித்தி - சுபக்கம்.1)