|
பொ-ரை: உறங்கும்போதும் உறங்காது உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலஞ்செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! பஞ்சனைய மெல்லடி உடைய இப்பாவை பலி கொணர்ந்து தேவரீர் பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்? கு-ரை: துஞ்சும்போதும் - உறங்கும்போதும். துயிலின்றி - அறிவு ஓய்தல் இன்றி உறக்கத்திலும் இறைவனை நினைந்தே இருத்தலின் துயிலின்றி என்றார். வஞ்சம் இன்றி என்பது வஞ்சின்றி எனத் தொக்கது. பஞ்சின் மெல்லடிப்பாவை - முனிபன்னியருள் ஒருத்தி. பலிகொணர்ந்து - பிச்சைகொண்டு. அஞ்சிநிற்பதும் - பயந்து நிற்பதும். ஐந்தலைநாகமே ஐந்தலை நாகத்திற்கே, ஐந்தலைநாகம் - முதல்வன் திருமேனியில் உள்ள- ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும் சுத்தமாயை; அதன் காரியமாகிய சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்னும் ஐந்து தத்துவங்களும் ஐந்தலை எனப்பட்டன. முதல்வன் இருவகை மாயைக்கும் ஆதாரமாகவும் தலைவனாகவும் உளன் என்பது வேதாகமங்களுட் கூறப்படும் உண்மை. அதனை `மாயையைப் பிரகிருதி (முதற்காரணம்) என அறிக, மாயையை உடையவன் மகேசுவரன் என்றறிகழு. என்னும் சுவேதா சுவதர உபநிடத உரையால் அறியலாம். |