பாடல் எண் : 93 - 5
தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.
5
பொ-ரை: தேனும், பாலும் போல்வானும், சந்திரனும் சூரியனும் போல்வானும், வானத்தின்கண் வெண்மதியினைச் சூடிய வீரனும், இளவேனிலுக்குரியவனாகிய மன்மதனைத் தீயழலால் மெலியச் செய்தவனுமாகிய ஞானக் கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ?
கு-ரை: மெலிவுசெய் - எரித்தழித்த. தீயழல் ஞானமூர்த்தியை - நெருப்பின் வடிவமாய் விளங்கும் அறிவுத்தெய்வத்தை.