பாடல் எண் : 94 - 9
நீற்றி னானை நிகரில்வெண் கோவணக்
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை
ஆற்றி னானை யமரர்த மாருயிர்
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.
9
பொ-ரை: திருநீறணிந்தவனும், ஒப்பற்ற வெள்ளிய கோவணக்கீறு உடையவனும், ஒளிகிளரும் சிவந்த சடைக்கண் கங்கையை உடையவனும் தேவர்க்கு உயிர்வழங்கினானுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
கு-ரை: நிகர் இல் - ஒப்பில்லாத. கோவணக்கீறு - கோவணம்.கீறு - கிழித்தது என்னும் பொருளது. கிளர் - விளங்கிய. ஒளி - ஒளியையுடைய. ஆறு - கங்கை. அமரர் தம் ஆருயிர் தோற்றினான் - தேவர்களுடைய அரிய உயிரை தன்னுள் ஒடுக்கி மீள உண்டாக்கியவன். அமரர்கள் நஞ்சுண்டு சாவாதுத் தோற்றியவன் எனலுமாம். தக்கன் வேள்வியில் அமரரை எழுப்பியதும் ஆம்.