பாடல் எண் : 98 - 8
மருவி னைமட நெஞ்சம் மனம்புகும்
குருவி னைக்குணத் தாலே வணங்கிடும்
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதே னுள்ளமே.
8
பொ-ரை: அறிவற்ற மடநெஞ்சமே மனம்புகும் குரு நாதனும், குணத்தால் வணங்கத்தக்க திருவும் ஆகிய பெருமானைப் பொருந்தினாய் சிந்தையுள் சிவனாய் நின்ற உருவினை என்னுள்ளம் கண்டுகொண்டது.
கு-ரை: மருவினை - மருவினையையாய். மடநெஞ்சமே - அறிவற்ற மனமே. குணத்தாலே - நற்குணங்களினாலே. திருவினை - செல்வவடிவாய் உள்ளவனை. உரு - முன்னர் மறைந்து நின்று பின்னர் நினைப்பில் உருவெளிப்பாடுபெற்ற நிலை.