பாடல் எண் :1148
எம்பி ரானிமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி யிருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றாரன்னி யூரரே.

5
பொ-ரை: தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும், எம் தலைவரும், துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
கு-ரை: எம்பிரான் - எங்கள் தலைவன். எம் ஈசன் - எம்மை ஆள்வோன். துன்பவல்வினை - துன்பத்திற்குக் காரணமாகிய வலியவினை. தொழுமவர்க்கு அன்பர் - செருக்கு நீங்கா உள்ளத்தால் தன்னை அளக்கலுறுவார்க்குச் சேயனாய், அன்பால் தொழுவார்க்கே அணுக்கனாய் நிற்பன் முதல்வன்.