|
பாடல் எண் :1225 | செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள் உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை அறுவிப் பாரது வன்றியும் நல்வினை பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே. |
| 4 | பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர் மேருமலை வில்லால் முப்புரங்களை அழியச் செய்வார்; தீர்த்தங்களை மிகுவிப்பார்; பல பத்தர்களின் ஊழ்வினை அறுவிப்பார்; அதுவன்றியும் நல்வினை பெறும்படியும் செய்வார். கு-ரை: சிலையால் - இமயவில்லால். மதில் - முப்புரங்களை. செறுவிப்பார் - அழியச் செய்தவர். தீர்த்தங்கள் உறுவிப்பார் - புண்ணிய வாவிகள் பலவற்றை உண்டாக்கி அளிப்பவர். அல்லது, அன்பர்களைத் தீர்த்தங்களை உற்று ஆடச் செய்வர். ஊழ்வினை - (அதனால்) முறையாக விளையும் வினைப்பயனை. அறுவிப்பார் - நீங்கச் செய்பவர். அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் - பத்தர்களை ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் சிவ நல்வினைகளை மேற்கொண்டு ஒழுகச் செய்வர். |
|