|
பாடல் எண் :1258 | சுனையுள் நீல மலரன கண்டத்தன் புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக் கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை நினையு முள்ளத் தவர்வினை நீங்குமே. |
| 5 | பொ-ரை: சுனையுள் பூத்த நீலமலர் போன்ற கண்டத்தனும், புனையும் பொன்னிறக் கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும். கு-ரை: சுனை - மலையிடத்துத் தானே தோன்றிய நீர்நிலை. நீல மலர் - குவளைமலர். அன - ஒத்த. புனையும் - அணியும். கனையும் - ஒலிக்கும். கொன்றை, புரிசடை, கழல் இவற்றை உடையான் என்க. |
|